Wednesday, March 26, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக் கொள்வது எப்படி?

மாணவர் உலகம் என்கிற தமிழ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட நான் எழுதிய கட்டுரைத் தொடர்.

அறிமுகம்

மாணவர்களே, இன்று நாம் இருப்பது வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்ற போட்டி நிறைந்த ஒரு உலகம். வாழ்க்கையில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று நாம் எல்லோருமே துடித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் வெற்றியடைய என்ன செய்யவேண்டும்? தேர்வில் நிறைய மதிப்பெண்கள் மட்டும் வாங்கிவிட்டால் போதுமா? அறிவும் திறமையும் மட்டும் போதுமா? போதாது என்பதே இன்றைய நிலைமை. அறிவும் திறமையும் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஈடாகவும், - இல்லை, இல்லை - அதற்கு ஒரு படி மேலாகவும் நமக்கு வேண்டியது சரியான மனப்பான்மை. (ATTITUDE) நல்ல ஒரு பெர்ஸனாலிடி (PERSONALITY). திடமான தன்னம்பிக்கை (SELF CONFIDENCE). சுய ஊக்கம் (SELF INITIATIVE) மற்றும் சுய தூண்டுதல் (SELF MOTIVATION) ஆகும். நான், கடந்த ஆறு வருடங்களாக பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது பற்றி வகுப்புகள் நடத்தி வந்திருக்கிறேன். பல மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும், முதல்வர்களுடனும் மற்றும் பெற்றோர்களுடனும் கலந்துரையாடியிருக்கிறேன்.  நான் இனி எழுதப்போவது, பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது பற்றி என் அனுபவத்தில் உணர்ந்ததும், பார்த்ததும், கேட்டதும், படித்ததும்தான்.
-    டீ.என்.நீலகண்டன்

டீ.என்.நீலகண்டன் வேதியியலில் ஒரு முது நிலை பட்டதாரி. நிதி, பொருளாதாரம், வங்கி, முதலீடு, ஆயுள் காப்பீடு, மனிதவள மேம்பாடு இவற்றில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் பதவியில் 35 வருடங்கள் அனுபவம் பெற்றவர். வேலையிலிருந்து ஓய்வு பெற்று, தற்போது இளைஞர்களின் மேம்பாட்டுக்காக ஒரு அறக்கட்டளையை திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் நிறுவி  நடத்தி வருகிறார். பல பள்ளிகளில், கல்லூரிகளில் PERSONALITY DEVELOPMENT, MOTIVATION, COMMUNICATION SKILLS, SPOKEN ENGLISH, QUIZ & GENERAL KNOWLEDGE வகுப்புகள் நடத்தி வருகிறார். இவர் தனது நேரத்தை இந்தியாவிலும் வட அமெரிக்காவிலுமாக கழித்துக்கொண்டிருக்கிறார். இவரை neelkant16@yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இனி மேலே படிக்கலாம்…….

அறிவும் திறமையும் மட்டுமே உங்களுடைய வெற்றியைத் தீர்மானிக்க முடியுமா?
“சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

இன்றைக்கு, பெரும்பாலான, படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு, அவர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ப நல்ல வேலை கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. நிறைய செலவு செய்து நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் படிப்பு முடித்த மாணவர்கள், அல்லது இரண்டு ஆண்டுகள் மேனேஜ்மண்ட் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வேலைக்காக அலைவதைப் பார்க்கும்பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வேலை கிடைக்காமல் வாழ்க்கையையே ஒரு தோல்வியாக பலர் நினைப்பதற்கு காரணங்கள் பல உண்டென்றாலும், படிக்கின்ற காலங்களில் தன்னை வளர்த்துக் கொள்வது பற்றிய ஒருவரின் மெத்தனப்போக்கு ஒரு மிகமிக முக்கியமாக காரணமாகும்.

இந்திய நாட்டின் 2011ம் ஆண்டின் ஜனத்தொகை கணக்குப் படி 14 வயதிற்குட்பட்ட மக்களின் எண்ணிக்கை 29.5 சதவிகிதம் என்று அறிகிறேன். இதில் ஆண்கள் 30 சதவிகிதம், பெண்கள் 28.8 சதவிகிதம். அதாவது இன்னும் ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இந்த முப்பது சதவிகித சிறுவர்கள், படித்த, பட்டம் பெற்ற இளய-முதியவர்களாக வாழ்க்கையின் முதல் படிக்கட்டில் நின்றுகொண்டிருப்பார்கள்.
மேலும் சற்று யோசித்துப் பார்த்தால், வரக்கூடிய பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இந்த முப்பது சதவிகித சிறுவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லையென்றால், அல்லது அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு சரியான சிந்தனையின்றி வளர்ந்தால், துணிவு, தன்னடக்கம், தன்னம்பிக்கை, தன்னைப்பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம் போன்ற நல்ல மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ளவில்லை  என்றால், இவர்கள் படித்த, பட்டம் பெற்ற இள-முதியவர்களாக, சரியான வேலயின்றி, தாழ்வு மனப்பான்மையோடு, கட்டுப்பாடு இல்லாமல் வெறுத்துப்போய் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுது நமது நாட்டின் கதி எப்படி இருக்கும்? ஒவ்வொரு மாநிலமும் புரட்சி வெடிக்கும் ஒரு பூமியாக அன்றோ இருக்கும்.

அதே சமயம், இதே முப்பது சதவிகித சிறுவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு, நல்ல ஒரு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய ஒரு திடமான கனவோடு வளர்ந்தால் நமது இளைய இந்தியா உலகுக்கே தலைமை தாங்கி நடத்த முடியாதா? இந்த உலகத்தையே நம்மால் வெல்ல முடியாதா?

மாணவர்களே, நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் இப்பொழுது ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறீர்கள்.

வரக்கூடிய பத்து இருபது ஆண்டுகளில் நீங்கள் உங்களை எப்படி கட்டிக் காத்துக்கொள்ளப் போகிறீர்கள், எப்படி உங்களை வளர்த்துக்கொள்ள போகிறீர்கள் என்பது இன்று ஒரு முக்கியமான விஷயம். இன்று நீங்கள் எடுக்கக் கூடிய முடிவு உங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. பாடங்களை மனப்பாடம் செய்து நிறைய மதிப்பெண்கள் மட்டும் வாங்கிவிட்டால் போதுமா? எதிர்காலத்தைப் பற்றிய ஒரு திடமான சிந்தனை, அறிவு, எதிர்பார்ப்பு, மற்றும் கனவுடன் ஒரு செயல்வீரராக விளங்க வேண்டாமா? என்ன செய்யப்போகிறீர்கள்? மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது.

அறிவும் திறமையும் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஈடாகவும், - இல்லை, இல்லை - அதற்கு ஒரு படி மேலாகவும் நமக்கு வேண்டியது சரியான மனப்பான்மை. (ATTITUDE) நல்ல ஒரு பெர்ஸனாலிடி (PERSONALITY). திடமான தன்னம்பிக்கை (SELF CONFIDENCE). சுய ஊக்கம் (SELF INITIATIVE) மற்றும் சுய தூண்டுதல் (SELF MOTIVATION) ஆகும்.

இன்றைக்கு, படிக்கின்ற மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கு, அவர்களது மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதே முக்கியமான தீர்வாகும்.

கை நிறைய சம்பளம் கொடுக்கும் பெரிய நிறுவனங்கள் இன்று மாணவர்களிடையே எதைப் பெரியதாக எதிர்பார்க்கிறார்கள்? இல்லை, யாருக்கும் கைகட்டி நிற்கப் போவதில்லையென்று, சுயமாக ஏதேனும் ஒரு தொழில் செய்ய விரும்புகிறீர்களா, அப்படி ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்திச்செல்வதற்கு அடிப்படையாக என்னென்ன தேவை? 
      
    * மனப்பான்மை (ATTITUDE)
·          *    கருத்தை எடுத்துச் சொல்லும் திறன் (COMMUNICATION SKILLS)
·          *   மற்றவர்களுடன் பழகி உறவு கொள்ளும் முறை (INTER PERSONAL RELATIONSHIP)
·     * ஒரு அணியில் உறுப்பினராகவும் இருந்துகொண்டு மற்றவர்களையும் வழி நடத்தும் திறமை (TO BE A     MEMBER OF A TEAM AND ALSO BE A LEADER – LEADERSHIP QUALITIES)
·        *   பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தன்மை (PROBLEM SOLVING SKILLS)
·   * எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம், குறிக்கோள், தீர்மானம், தன்னம்பிக்கை, தொலை நோக்குப் பார்வை (GOALS AND OBJECTIVES, DETERMINATION, VISION, SELF-CONFIDENCE)
·       *  தன்னைப் பற்றிய ஒரு அறிவு (AWARENESS ABOUT ONE’S STRENGTHS, WEAKNESSES, OPPORTUNITIES AND THREATS)
·        * சுய மரியாதை (SELF-ESTEEM)
·       *  உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறமை (EMOTIONAL QUOTIENT)

இவைகள்தான் உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும். தேர்வுகளில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் போதாது. நீங்கள் வெறும் அறிவாளியாகவோ, சிறந்த திறமைசாலியாகவோ இருந்தால் மட்டும் போதாது. உங்களுடைய மனப்பான்மையை ஒட்டியே உங்கள் வெற்றிகள் அமையும். சரியான மனப்பான்மை இருந்தால், அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள அறிவும் திறமையையும் மட்டும் போதாது. சரியான மனப்பான்மை இருந்தால் ஒரு வெற்றியாளரக, சாதனையாளரக, ஏன், ஒரு சேம்பியனாகக் கூட நம்மை வளர்த்துக் கொள்ள முடியும். நமது மனப்பான்மை நமக்கு ஒரு நல்ல பெர்ஸனாலிடியை கொடுக்கும்.

நமது பெர்ஸனாலிடியை தீர்மானிக்க கூடியவை எவை என்று பார்த்தால்,

முதலில் வருவது  நமது சக்தி. உடல் பலம், மன பலம், ஆன்மீக பலம்

இரண்டாவதாக வருவது நமது அபிப்பிராயங்கள் (BELIEFS). நம்மைப் பற்றி, நமது தகுதிகளைப் பற்றி, நமது  குணங்களைப் பற்றி, நமது பின்னணியைப் பற்றி, நமது குடும்பத்தைப் பற்றி, நமது எதிர்காலத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள், நமது சுய அபிப்பிராயம், மற்றும் சுய மரியாதை (SELF-ESTEEM)
அடுத்ததாக, நமது பலம், பலவீனம், வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் பற்றிய சமமான ஒரு சுய அறிவு.
அடுத்ததாக, நமது உள்-உரையாடல்கள் (INTERNAL COMMUNICATION). நமது மனதில் சதா ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகள் – முக்கியமாக எதிர்மறையான உள்-உரையாடல்கள், எண்ணங்கள்.

நமது சூழ்நிலை – நாம் பிறந்து வளர்ந்த சூழ்நிலை,  நம்மை சுற்றியிருக்கும் மக்கள்

நமது பழக்க வழக்கங்கள்

நமது ஆழ்ந்த விருப்பங்கள், நமது முயற்சிகள், நமது எதிர்பார்ப்புகள்.

இன்னும் பல.

இவற்றைப் பற்றியெல்லாம் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு சில கருத்துக்களைப் விரிவாக நாம் ஆராய்ந்து சிந்தித்துப் பார்க்கலாம்.
                                                                                   …….. தொடரும்


No comments:

Post a Comment